Archives: ஜூன் 2021

திருப்தியின் இரகசியம்

நீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது   கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.

ஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம்! பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார்? கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).

நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள். 

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

தேவனுடைய பாதுகாப்பு

ஊசி, பால், காளான், லிஃப்ட், பிறப்பு, தேனீ, போன்று எதை கண்டாலும் பயப்படும் ஆட்ரியன் மாங்க், “மாங்க்” என்று அவரின் பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் முக்கியக் கதாப்பாத்திரம். அதில் அவரைப் போன்றே பயப்படும் துணை கதாப்பாத்திரமான ஹெரால்ட் க்ரென்ஷாவுடன் ஒரு காரின் பின்பெட்டியில் அடைத்துவைக்கப்படுகிறார். தன்னுடைய பயங்கள் வரிசையில், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டதினால் ஏற்படும் பயத்திலிருந்து மாங்க் அன்று விடுவிக்கப்படுகிறார்.

மாங்க் மற்றும் ஹெரால்ட் ஆகிய இருவரும் அந்த காரின் பின்பெட்டியில் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது, மாங்கிற்கு ஓர் தீடீர் எண்ணம் உதிக்கிறது. “நாம் இதை தவறான பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று மாங்க் கூறுகிறார். “நம்மை அடைத்து வைத்திருக்கிற இந்த பெட்டி, நம்மை மூடவில்லை, உண்மையில் அது நம்மை பாதுகாக்கிறது; வெளியிலிருக்கும் கிருமிகள், பாம்புகள், சத்தங்கள் ஆகியவற்றிலிருந்து இது நிஜமாகவே நம்மை பாதுகாக்கிறது” என்று மாங்க் கூற, ஆச்சரியத்தில் ஹெரால்ட் தன் கண்களை அகல விரித்து, “அப்படியென்றால், இந்த பெட்டி நமது நண்பன்” என்று மெல்லமாக கூறுவதாக கதை அமைக்கப்படுகிறது.

சங்கீதம் 63இல் தாவீதுக்கும் இதேபோன்ற ஒரு வெளிப்பாடு கிடைக்கிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்திலே” இருந்தபோதும், தாவீது கர்த்தருடைய வல்லமையையும் மகிமையையும், கிருபையையும் பார்க்கிறான் (சங். 63:1-3). அந்த வறண்ட பாலைவனத்தையும் தேவன் தனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பான இடமாய் உணருகிறான். ஒரு பறவைக்குஞ்சு தன் தாயின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுவதுபோல, தாவீது தேவனிடத்தில் அடைக்கலம் புகுகிறான். வனாந்திரமான அந்த இடத்திலும், “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல” (வச. 5) தன் ஆத்துமா திருப்தியாகிறது என்றும் “ஜீவனைப்பார்க்கிலும்” (வச. 3) மேலான கிருபையினால் பெலமும் உற்சாகமும் அடைகிறான்.

விட்டுச்சென்ற கருணை

மார்த்தா, ஆரம்பப் பள்ளியொன்றில் உதவி ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் பணம் சேமித்து வைத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தருவது அவரது வழக்கம். இரத்தப்புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த மார்த்தாவின் சேவையைப் பாரட்டி எங்கள் பள்ளியில் அவளுக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூங்கொத்துகளோடு சேர்த்து நூற்றுக்கணக்கான புத்தாடைகளை ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாய் வழங்கினர். மார்த்தாவின் தியாகமான சேவையைக் குறித்தும் மற்றவர்களை ஊக்கப்படுத்திய அவரது கருணை உள்ளத்தைக் குறித்தும் பல்வேறு சாட்சிகள் பகிரப்பட்டது. அவரின் சேவையை மதித்த அவரது சக ஆசிரியர்கள், அவள் செய்து வந்த அந்த தொண்டை, அவளது மறைவுக்குப் பின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றனர். மார்த்தா விட்டுச்சென்ற இந்த கருணை உள்ளம், தேவையுள்ளவர்களுக்கு உதவ இன்னும் பலரை ஊக்குவிக்கிறது.

அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்” செய்து வந்த தொற்காள் என்னும் பெண்ணைக்குறித்து லூக்கா பதிவு செய்கிறார் (வச. 39). அவள் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறாள். ஆனால் அங்கிருந்த பேதுருவை மக்கள் வருந்தி அழைக்கின்றனர். அங்கிருந்த விதவைகள் அனைவரும் அழுது, தொற்காள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தாள் என்பதை பேதுருவுக்கு தெரிவித்தனர் (வச. 39). பேதுரு தொற்காளை உயிரோடு எழும்பப்பண்ணுகிறார். “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42). எளியவர்களுக்கு உதவும் தொற்காளின் இந்த சேவை மனப்பான்மை மற்றவர்களின் உள்ளத்தைத் தொட்டது, அத்துடன், அன்போடு கூடிய தயாள குணத்தின் வலிமையை மற்றவர்களுக்கு தெளிவாய் வெளிப்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார். 

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6)என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர். 

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம். 

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.