ஜூன், 2021 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2021

திருப்தியின் இரகசியம்

நீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது   கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.

ஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம்! பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார்? கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).

நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள். 

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

தேவனுடைய பாதுகாப்பு

ஊசி, பால், காளான், லிஃப்ட், பிறப்பு, தேனீ, போன்று எதை கண்டாலும் பயப்படும் ஆட்ரியன் மாங்க், “மாங்க்” என்று அவரின் பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் முக்கியக் கதாப்பாத்திரம். அதில் அவரைப் போன்றே பயப்படும் துணை கதாப்பாத்திரமான ஹெரால்ட் க்ரென்ஷாவுடன் ஒரு காரின் பின்பெட்டியில் அடைத்துவைக்கப்படுகிறார். தன்னுடைய பயங்கள் வரிசையில், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டதினால் ஏற்படும் பயத்திலிருந்து மாங்க் அன்று விடுவிக்கப்படுகிறார்.

மாங்க் மற்றும் ஹெரால்ட் ஆகிய இருவரும் அந்த காரின் பின்பெட்டியில் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது, மாங்கிற்கு ஓர் தீடீர் எண்ணம் உதிக்கிறது. “நாம் இதை தவறான பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று மாங்க் கூறுகிறார். “நம்மை அடைத்து வைத்திருக்கிற இந்த பெட்டி, நம்மை மூடவில்லை, உண்மையில் அது நம்மை பாதுகாக்கிறது; வெளியிலிருக்கும் கிருமிகள், பாம்புகள், சத்தங்கள் ஆகியவற்றிலிருந்து இது நிஜமாகவே நம்மை பாதுகாக்கிறது” என்று மாங்க் கூற, ஆச்சரியத்தில் ஹெரால்ட் தன் கண்களை அகல விரித்து, “அப்படியென்றால், இந்த பெட்டி நமது நண்பன்” என்று மெல்லமாக கூறுவதாக கதை அமைக்கப்படுகிறது.

சங்கீதம் 63இல் தாவீதுக்கும் இதேபோன்ற ஒரு வெளிப்பாடு கிடைக்கிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்திலே” இருந்தபோதும், தாவீது கர்த்தருடைய வல்லமையையும் மகிமையையும், கிருபையையும் பார்க்கிறான் (சங். 63:1-3). அந்த வறண்ட பாலைவனத்தையும் தேவன் தனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பான இடமாய் உணருகிறான். ஒரு பறவைக்குஞ்சு தன் தாயின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுவதுபோல, தாவீது தேவனிடத்தில் அடைக்கலம் புகுகிறான். வனாந்திரமான அந்த இடத்திலும், “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல” (வச. 5) தன் ஆத்துமா திருப்தியாகிறது என்றும் “ஜீவனைப்பார்க்கிலும்” (வச. 3) மேலான கிருபையினால் பெலமும் உற்சாகமும் அடைகிறான்.

விட்டுச்சென்ற கருணை

மார்த்தா, ஆரம்பப் பள்ளியொன்றில் உதவி ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் பணம் சேமித்து வைத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தருவது அவரது வழக்கம். இரத்தப்புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த மார்த்தாவின் சேவையைப் பாரட்டி எங்கள் பள்ளியில் அவளுக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூங்கொத்துகளோடு சேர்த்து நூற்றுக்கணக்கான புத்தாடைகளை ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாய் வழங்கினர். மார்த்தாவின் தியாகமான சேவையைக் குறித்தும் மற்றவர்களை ஊக்கப்படுத்திய அவரது கருணை உள்ளத்தைக் குறித்தும் பல்வேறு சாட்சிகள் பகிரப்பட்டது. அவரின் சேவையை மதித்த அவரது சக ஆசிரியர்கள், அவள் செய்து வந்த அந்த தொண்டை, அவளது மறைவுக்குப் பின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றனர். மார்த்தா விட்டுச்சென்ற இந்த கருணை உள்ளம், தேவையுள்ளவர்களுக்கு உதவ இன்னும் பலரை ஊக்குவிக்கிறது.

அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்” செய்து வந்த தொற்காள் என்னும் பெண்ணைக்குறித்து லூக்கா பதிவு செய்கிறார் (வச. 39). அவள் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறாள். ஆனால் அங்கிருந்த பேதுருவை மக்கள் வருந்தி அழைக்கின்றனர். அங்கிருந்த விதவைகள் அனைவரும் அழுது, தொற்காள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தாள் என்பதை பேதுருவுக்கு தெரிவித்தனர் (வச. 39). பேதுரு தொற்காளை உயிரோடு எழும்பப்பண்ணுகிறார். “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42). எளியவர்களுக்கு உதவும் தொற்காளின் இந்த சேவை மனப்பான்மை மற்றவர்களின் உள்ளத்தைத் தொட்டது, அத்துடன், அன்போடு கூடிய தயாள குணத்தின் வலிமையை மற்றவர்களுக்கு தெளிவாய் வெளிப்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.  
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.  
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.